ரிசர்வ் வங்கியின் காசோலை துண்டிப்பு முறை எனும் புதிய திட்டம்!

வணிகம், சொந்த செலவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகப் பணம் பெறவோ அல்லது பணம் செலுத்தவோ நாம் காசோலை முறைகளைப் பயன்படுத்துகிறோம். இந்த காசோலைகளைப் பணமாக மாற்றும் போது, பணம் பெறும் நபரின் வங்கிக் கணக்கு எண், பெயர் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

இந்நிலையில் கையெழுத்திட்ட காசோலை தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அந்த காசோலை மூலம் வேறு நபர்கள் பணம் பெற வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க காசோலை தொலைந்தவுடன் சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தகவல் தெரிவித்து பணம் கொடுப்பதை நிறுத்தி வைக்க முடியும். காசோலை பரிவர்த்தனை உள்ள வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றாலும் பணப்பட்டுவாடாவை நிறுத்தி வைக்க முடியும்.

ஆனாலும் இதில் பல்வேறு பிரச்சினைகளும், நடைமுறை சிக்கல்கள் மற்றும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் காலதாமதம் போன்றவற்றால் நம்பகத்தன்மையை இழக்கும் வாய்ப்பும் மற்றும் பணத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளது.எனவே இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அது தொடர்பாக வங்கிகளுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும் என்று புதிய திட்டத்தை ரிசர்வு வங்கி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த திட்டத்தின் பெயர் " காசோலை துண்டிப்பு முறை" ஆகும். இந்த திட்டம் ஜனவரி 1 ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் எஸ்.எம்.எஸ்., மொபைல் பேங்கிங் மற்றும் இண்டர்நெட் பேங்கிங் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் பணத்தைப் பெறுபவரின் பெயர், தொகை மற்றும் தேதி ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.5 இலட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்யப்படும் காசோலைகளுக்கு இந்த திட்டத்தைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

More News >>