ஒரே நாளில் 20 ஆயிரம் பத்திரங்கள் பதிவு : 123 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை

கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த சில மாதங்களாகப் பத்திரப்பதிவு துறையும் முடங்கியது. தமிழக அரசுக்கு வரவேண்டிய வருமானம் இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து , தமிழகத்தில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. தினசரி குறிப்பிட்ட அளவிலேயே பத்திரப்பதிவுகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், ஊரடங்கு , இ-பாஸ் நிர்ப்பந்தம் காரணமாகவும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், மக்கள் வெளியே நடமாடவே தடை விதிக்கப்பட்டிருந்ததால், பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பத்திரங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. பின்னர் படிப்படியாக பொது முடக்கத்தில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் பத்திரப்பதிவு தொடங்கியது.

அதையடுத்து, ஐப்பசி மாத முகூர்த்த நாளான நேற்று 29 ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் குவிந்தனர். நல்ல நாள் என்பதால் . ஏராளமானோர் , புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பாகப் பத்திரங்கள் பதிவு செய்யும் வகையில், எல்லா ஊர்களிலும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.பத்திரப்பதிவு அலுவலகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 20,307 பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.123.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது . இது பத்திரப்பதிவு துறையில் புதிய மைல்கல் என்றும், புதிய சாதனை என்றும் கூறப்படுகிறது.

More News >>