அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக டிரம்ப் அறிவிப்பு.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முடிவு..

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். இதையடுத்து, தானே வெற்றி பெற்றதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்கு நீதிமன்றம் செல்லப் போவதாக கூறியிருக்கிறார்.அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறும். தற்போது அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிட்டார். துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிந்து இந்திய நேரப்படி இன்று(நவ.4) அதிகாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் ஆகிய இருவருமே ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வந்தனர். ஒவ்வொரு மாகாணத்திலும் கிடைக்கும் வாக்குசதவீதத்தைப் பொறுத்து, எலக்ட்டோரல் காலேஜ் எனப்படும் அதிபரை தேர்ந்தெடுக்கும் சபைக்கான எண்ணிக்கை முடிவு செய்யப்படும். இதில் 270 இடங்களை கைப்பற்றினால் வெற்றி என்று மெஜாரிட்டி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக, எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 238 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 இடங்களை கைப்பற்றியுள்ளார். எனினும், யார் அதிபராக வெற்றி பெறுவார் என்பது இழுபறியாக போய்க் கொண்டிருக்கிறது.

ஆனாலும், ஜோ பைடன் தனது ஆதரவாளர்கள் முன்பாக தோன்றி, நாம் வெற்றி பெறுவது உறுதி என்று கூறி விட்டு சென்றார். இதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், என்னை பொறுத்தவரை நாம் வெற்றி பெற்று விட்டோம். ஆனால், இந்த தேர்தலில் மோசடி நடக்கிறது. இது அமெரிக்க மக்கள் மீதான மோசடியாகும். வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று கோரி, உச்சநீதிமன்றத்திற்கு செல்லப் போகிறேன் என்று அவர் கூறினார். இதனால், அமெரிக்க தேர்தலில் கடைசி நேர பரபரப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

More News >>