சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடரும் கொரோனா பரவல்..

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதன்பின், படிப்படியாகக் குறைந்து, அக்.12ம் தேதி 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. இதைத் தொடர்ந்து, புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று(நவ.5) 2348 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 36,777 பேராக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2413 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 6444 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 28 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,272 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைந்தவர்களுக்கே பாதிப்பு கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 19,061 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 621 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 112 பேர், திருவள்ளூர் 148, காஞ்சிபுரம் 102, கோவையில் 238, ஈரோடு 98, திருப்பூர் 110, சேலம் மாவட்டத்தில் 130 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் இது வரை 2 லட்சத்து 3085 பேருக்கும், செங்கல்பட்டில் 44,416 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 38,436 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,020 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 3 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

More News >>