விஜய் சேதுபதி நடிக்கும் மலையாள படம் 19 (1) (a) படப்பிடிப்பு தொடங்கியது

'மார்க்கோணி மத்தாயி' என்ற படத்திற்குப் பின்னர் விஜய்சேதுபதி இரண்டாவதாக நடிக்கும் மலையாளப் படமான 19 (1) (a) படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் தொடங்கியது. விரைவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பக் குழுவுடன் இணைய உள்ளார்.தமிழ் சினிமாவுக்கும், தமிழ் நடிகர்களுக்கும் கேரளாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித், சூர்யா விஜய் சேதுபதி உள்படப் பல நடிகர்களுக்குக் கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ரஜினி, விஜய் உள்படத் தமிழ் நடிகர்களின் படங்கள் மலையாள சினிமாக்களுக்கு இணையாகக் கேரளாவில் ஏராளமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. சமீபத்தில் வெளியான விஜய்யின் பிகில் படம் மோகன்லால், மம்மூட்டி படங்கள் வெளியாவதை விட அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய தமிழ் நடிகர்களில் கமல் தான் அதிக மலையாள படங்களில் நடித்துள்ளார். வேறு எந்த பிரபல நடிகரும் மலையாள சினிமாக்களில் அதிகமாக நடித்ததில்லை.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கடந்த வருடம் ஜெயராமுடன் மார்க்கோணி மத்தாயி என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிகராகவே வருவார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில் விஜய் சேதுபதி இரண்டாவதாக மேலும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புதுமுக பெண் இயக்குனரான இந்து இந்த படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதிக்கு நித்யா மேனன் ஜோடியாகிறார். இவர்கள் தவிர இந்திரஜித், இந்திரன்ஸ் உள்பட நடிகர், நடிகைகள் இதில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு 19 (1) (a) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது வழக்கமான நாயகன், நாயகியைச் சுற்றிவரும் கதை அல்ல என்றும், சில கதாபாத்திரங்கள் சேரும் சினிமா என்றும் இயக்குனர் இந்து கூறுகிறார்.இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் நேற்று தொடங்கியது. விரைவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பு குழுவுடன் இணைய உள்ளார். அன்வர் அலியின் பாடல்களுக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மகேஷ் மாதவன், எடிட்டிங் விஜய் சங்கர். கொரோனா வழிகாட்டுதல் நிபந்தனைகளின் படி இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

More News >>