கேரளாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனை இலவசம்

கேரளாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு ஆன்டிஜன் கொரோனா பரிசோதனை இலவசமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரிடர் நிவாரணத் துறை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.கொரோனா வைரசை கண்டுபிடிக்க ராபிட் ஆன்டிஜன், ஆர் டி பி சி ஆர், சி பிநாட், ட்ரூநாட் உட்பட ஏராளமான பரிசோதனைகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்தில் இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்ற போதிலும், தனியார் மருத்துவமனையில் இதற்கு கட்டணம் மிக அதிகமாகும்.

இந்நிலையில் கேரளாவில் ராபிட் ஆன்டிஜன் பரிசோதனையை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள பேரிடர் நிவாரணத் துறை முதன்மை செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு பரிசோதனைக் கூடங்களில் பரிசோதனை நடத்துவதற்கோ, முடிவு தெரிவதற்கோ தாமதம் ஏற்பட்டால் அரசு அங்கீகரித்த தனியார் பரிசோதனை கூடங்களில் பரிசோதனை நடத்தலாம். ஒவ்வொரு பரிசோதனைக்கும் தனியார் பரிசோதனை கூடங்களுக்கு ₹625 வழங்கலாம். இந்த தொகையை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து செலவு செய்ய அனுமதிக்கப்படும். இவ்வாறு கேரள பேரிடர் நிவாரணத் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>