கருணாஸ் கொலை மிரட்டல் விடுக்கிறார் : கட்சி பிரமுகர் வழக்கு

பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை . உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் .அதில், நான் தற்போது முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன்.கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த அமைப்பைத் தொடங்கி நடிகர் கருணாஸ் தலைவராகவும் நான் பொதுச் செயலாளராகவும் இருந்து நடத்தி வந்தோம்.

கருணாஸ் தற்போது திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சில காலத்திற்கு முன் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து நடிகர் கருணாஸின் தூண்டுதலின் பேரில் 2017 ஜூன் மாதம் எனது வீட்டில் சிலர் பெட்ரோல் குண்டு வீசி மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து நான் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து நிலுவையில் உள்ளது.மேலும் வீட்டில் நான் இல்லாத நேரத்திலும் பலர் என் வீட்டு முன் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி மிரட்டி உள்ளனர்.எனக்கு அடிக்கடி அவர் மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவர் அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் சந்தித்து தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்களைக் குற்றச்செயல்களில் இருந்து காப்பாற்றி வருகிறார்.

எனவே அவரால் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென்று குறிப்பிட்டு இருந்தார்.இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், அவரது புகார்கள் குறித்த நிலை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

More News >>