அது எனக்கு வந்த ஸ்பெஷல் மெசேஜ்... படிக்கல் நெகிழ்ந்த அந்த வீரர்!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் தேவ்தத் படிக்கல். அறிமுக தொடரான இதில் தொடர்ந்து சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி முத்திரை பதித்தார். இவர் விளையாடிய விதம் ஒரு அறிமுக வீரரை போல் இல்லாமல் அனுபவ வீரரை போல் இருந்தது. பெங்களூரு அணிக்கு நீண்ட காலமாக இருந்த ஓப்பனிங் பிரச்சனையை இவரின் ஆட்டத்திறன் மூலம் அந்த குறையை போக்கினார். மொத்தம் 15 போட்டிகளில் விளையாடிய தேவ்தத் படிக்கல் 473 ரன்களை குவித்தார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். இதனால் தற்போது இவருக்கு வளர்ந்து வரும் வீரர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்களை குவித்த போது தனக்கு வந்த ஒரு ஸ்பெஷல் மெசேஜ் பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார் படிக்கல். அந்த மெசேஜை அனுப்பியவர் வேறு யாரும் அல்ல. படிக்கல்லின் சக அணி வீரர், ஏபி டிவில்லியர்ஸ் தான். இது தொடர்பாக படிக்கல் பேசுகையில், ``மும்பைக்கு எதிரான ஆட்டத்தை முடித்து பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி எனது ஆட்டத்தை பாராட்டினார் ஏபி டிவில்லியர்ஸ். அந்த மெசேஜில், ``நீங்கள் அபாரமாக ஆடுகிறீர்கள். இதே மாதிரியான விளையாட்டை தொடர்ந்து வெளிப்படுத்துங்கள். உங்கள் விளையாட்டை அனுபவித்து விளையாடுங்கள்" எனக் கூறியிருந்தார். அவரின் அந்த மெசேஜ் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் மெசேஜ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

More News >>