தூத்துக்குடியில் காவலரை பாராட்டிய எஸ்.பி.

தூத்துக்குடியில் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்த போக்குவரத்து காவலரை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் பாராட்டியுள்ளார். மாநிலத்தின் பல பகுதிகளிலும் பருவ மழை பெய்து வரும் நிலையில் இன்று தூத்துக்குடியில் இரண்டு மணி நேரமாக கனமழை பொழிந்தது. கடும்மழையின் காரணமாக தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கொட்டும் மழையின் மத்தியிலும் தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்.

காவலரின் கடமையுணர்ச்சியை கண்ட பொதுமக்கள் அவர் பணி செய்வதை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அதை பார்த்த பலர் காவலரை பாராட்டி பின்னூட்டத்தில் கருத்து பதிவிட்டனர். போக்குவரத்து காவலரான அவர் பெயர் முத்துராஜ். முத்துராஜை பற்றிய தகவல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாருக்கு சென்றது. உடனே எஸ்.பி. காவலர் பணியாற்றும் இடத்துக்கு நேரில் சென்று வெகுமதி அளித்து முத்துராஜை பாராட்டி, ஊக்கப்படுத்தினார்.

More News >>