குஷ்பு கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து.. முருகன் காப்பாற்றியதாக பேட்டி.. .

மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் உருக்குலைந்தாலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காங்கிரசில் இருந்த போது பிரதமரைக் கடுமையாக விமர்சித்த நடிகை குஷ்பு சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அதன்பிறகு தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இன்று கடலூரில் நடைபெறும் பாஜகவின் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக குஷ்பு தனது காரில் சென்றார்.

சென்னையில் இருந்து கடலூர் நோக்கி அவர் கார் சென்ற போது, மதுராந்தகம் அருகே விபத்தில் சிக்கியது. அவரது காரை கண்டெய்னர் லாரி ஒன்று முந்த முயன்ற போது, காரின் பக்கவாட்டில் பலமாக மோதியிருக்கிறது. இதில் கார் கதவுகள் கடும் சேதம் அடைந்தன.இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு குஷ்பு தனது செல்போனில் அளித்த பேட்டி வருமாறு:கண்டெய்னர் லாரி என் கார் மீது இடித்ததில் கார் மட்டுமே சேதம் அடைந்தது. எனக்கும் மற்றவர்களுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அந்த முருகன் தான் எங்களை காப்பாற்றியுள்ளார். எனது கணவர் வணங்கும் முருகக் கடவுளின் அருளால் நாங்கள் உயிர் தப்பியிருக்கிறோம். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனே எங்கள் உயிரைக் காப்பாற்றி எங்களை வரச் சொல்லியிருப்பதால், தொடர்ந்து வேல் யாத்திரையில் பங்கேற்பதற்குக் கடலூருக்கு செல்கிறோம்.

இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

More News >>