போலி செய்திகளை தடுக்க புதிய விதிமுறைகள் : உச்ச நீதிமன்றம் யோசனை

ஊடகங்களில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தொற்று பரவ துவங்கியதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு தான் காரணம் எனப் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது வெறுப்புணர்வைப் பரப்பும் வகையில் உள்ளதாகவும் இதைத் தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த தொடர்பாக மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் திருப்தி யாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கேபிள் டிவி சட்டத்தின்கீழ் இத்தகைய போலி செய்திகளைப் பரப்பக்கூடிய ஊடகங்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளது, ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பது உரித்து 3 வார காலத்திற்குள் மத்திய அரசு விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் விவகாரங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசிடம் அதிகாரம் உள்ளது. இருப்பினும் அது கருத்து சுதந்திரம் சார்ந்த விஷயம் என்பதால் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது என்றார். அப்போது நீதிபதிகள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் போலியாக இருக்கும் பட்சத்தில் அது தொடர்பான புகார்களை விசாரிப்பதற்குத் தனியாக விதிமுறைகள் இல்லை என்றால் அதனைப் புதிதாக உருவாக்குங்கள் என அறிவுறுத்தினர்.

More News >>