மழைக்காலத்தில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டுமா?? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

பெண்களுக்குச் சரும பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானது.நாம் சரியாகக் கவனிக்க மறந்து விட்டால் சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் ஆகியவை நம் சருமத்தை அழிக்கத் தயாராகி விடும். அதுவும் குறிப்பாக மழைக் காலத்தில் சருமம் அதிக ஈரப்பதம் நிறைந்து காணப்படும். சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம் அதனால் தான் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள முகத்திற்கு டோனர் மற்றும் பல பொருள்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் தேவைக்கு அதிகமாக ஈரப்பதம் கிடைக்கும் போது சருமம் பாதிப்புக்கு உள்ளாகும். சருமம் பாதிக்காமல் இருக்கச் சரியான வழிகளைப் பின்வருமாறு காணலாம்...

எலுமிச்சை பழத் தோல் ஸ்கரப்:-

வாரத்தில் ஒரு முறை சருமத்தில் ஸ்கரப் செய்வது முக்கியம். நாம் வெளியே செல்லும் பொழுது வாகனங்கள் வெளியிடும் புகை நமது சருமத்தைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இதனை உடனே அகற்றி விட்டால் சருமத்திற்கு எந்த வித அபாயமும் இல்லை. இதனால் வெளியே சென்று வீட்டுக்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து ஆவி பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் சருமத்தில் உள்ள அழுக்கு போன்றவற்றை எடுத்து விடும். அடுத்தது வாரத்தில் ஒரு முறை எலுமிச்சை பழத் தோல் அல்லது ஆரஞ்ச் பழத் தோலை எடுத்து சர்க்கரையில் தொட்டு முகத்தில் ஒரு 10 நிமிடம் மென்மையாகத் தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை அலச வேண்டும் .

டோனரின் அவசியம்:-

சருமம் வறண்டு விடாமல் இருக்கத் தினமும் முகத்திற்கு டோனர் போடுவது அவசியம். அதுவும் குளித்து விட்டு வந்தவுடன் டோனரை பயன்படுத்தவும். டோனர் என்றால் ஏதோ விலை உயர்ந்த பொருள் என்று எண்ண வேண்டாம். நாம் அனைவரின் வீட்டில் கண்டிப்பாக இருக்கும் ரோஸ் வாட்டரை டோனராக பயன்படுத்தலாம். முகம் அலசியவுடன் ஒரு துண்டில் துடைத்து விட்டு பிறகு ஒரு காட்டன் பாலில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வருவதால் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது.

ஃபேஸ் மாஸ்க்:-

சருமத்தில் ஈரப்பதம் தக்க வைத்துக் கொள்ள வாரத்துக்கு ஒருமுறை ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு முல்தானிமிட்டி எடுத்துக் கொண்டு அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துக்குப் போட்டு 20 நிமிடம் உலர வைக்கவும். பின்பு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகம் பொலிவாகவும் மற்றும் மழைக் காலத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

More News >>