மவுத் வாஷ், கொரோனா வைரஸை கொல்லுமா? - பிரிட்டன் பல்கலை கூறுவது என்ன?

கொரோனோ வைரஸை குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் புதிய புதிய கண்டுபிடிப்புகள், செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. தடுப்பு மருந்துகள் ஓரளவு வெற்றி கண்டுள்ளன என்ற தகவலும் கூறப்படுகிறது. இது தவிர பல்வேறு கை மருந்துகள் என்னும் வீட்டு வைத்தியமும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதை' என்பது போல, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய 'மவுத் வாஷ்' கோவிட்-19 கிருமியை கொல்லுகிறது என்ற தகவலை வேல்ஸில் உள்ள புகழ்பெற்ற கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. ஆய்வக சூழலில் கிடைத்த இந்த உண்மை சிகிச்சை அளவில் பலன் தருமா என்பது இனிதான் தெரிய வரும்.

ஆய்வக சூழலில் கொரோனா வைரஸின்மேல் மவுத் வாஷின் தாக்கம் கண்காணிக்கப்பட்டுள்ளது. மவுத் வாஷில் 0.07 சதவீதம் செட்டிபைரிடினியம் குளோரைடு என்ற வேதிப்பொருள் உள்ளது. இதனால் மவுத் வாஷ் திரவம் வைரஸை அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அனைத்து மவுத் வாஷ்களும் ஈறுகளை தாக்கும் நோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியவையாக தயாரிக்கப்படுகின்றன. இவை கோவிட்-19 வைரஸை மட்டுமல்ல, அதேபோன்ற அத்தனை வைரஸ்களை கொல்லக்கூடும் என்று தலைமை ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் ஸ்டேன்டோன் கருத்து தெரிவித்துள்ளார்.

எச்சிலில் உள்ள கோவிட்-19 கிருமியை கொன்றாலும் சுவாச பாதை மற்றும் நுரையீரலில் உள்ள கிருமிகள் மவுத் வாஷ் பயன்படுத்தாத இடங்களில் உள்ளதால் அவற்றை குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆய்வக சூழலில் கிடைத்த இந்த முடிவு, நோயுற்றோரிடம் மருத்துவமனை சூழலில் கிடைக்குமா என்று அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் தெரிய வரும்.

More News >>