சிமென்ட் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் அதிர்ச்சி!

இந்தாண்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத பட்சத்தில், அடுத்தடுத்த பொருட்களின் மீதான விலை உயர்வு மக்களை இன்னும் பொருளாதார வீழ்ச்சிக்குத் தள்ளிக்கொண்டு செல்கிறது.வெங்காய விலை உயர்வு, உருளைக்கிழங்கு விலை உயர்வு இந்த வரிசையில் சிமென்ட் விலையும் உயரதொடங்கியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரைக் கட்டமான துறையில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களின் வாழ்வாதாரமே இந்த துறையை நம்பித்தான் உள்ளது. இந்நிலையில், சிமென்ட் விலை, திடீரென மூட்டைக்கு, 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், கட்டுமான துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில், கட்டுமான பணிகள் முற்றிலுமாக முடங்கின. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கும் நிலையில், சிமென்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சிமென்ட் நிறுவனங்கள், 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் மீதான விலையில், 60 முதல் 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர்.ஜூன் மாதம் ஏற்பட்ட இந்த விலை உயர்வால்,கட்டுமான பணிகள் துவங்குவது தாமதமானது. பண்டிகை காலம் முடிந்த நிலையில், கட்டுமான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள இத்துறையினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தற்போது மீண்டும் சிமென்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்த துறை சார்ந்தவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியக் கட்டுமான வல்லுனர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.ராமபிரபு கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த சிமென்ட் நிறுவனங்கள், எவ்வித அடிப்படை காரணமும் இன்றி விலையை உயர்த்தி வருகின்றன. மூட்டைக்கு, 60 ரூபாய் உயர்த்தப்பட்ட சில மாதங்களில், மீண்டும் மூட்டைக்கு, 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான நிறுவனங்களும், வீடு கட்ட நினைக்கும் பொது மக்களும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். விலை உயர்வால், 410 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை சிமென்ட், தற்போது, 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

More News >>