பிரான்ஸ் ஜனாதிபதியா அடுத்த குறி... ஜெய்ஷ் -இ-முகமது என்ன சொல்கிறது?!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஆசிரியர் ஒருவரை அவரின் மாணவரே தலையை துண்டாக வெட்டி கொலை செய்தார்.. அந்த ஆசிரியர் பெயர் சாமுவேல் பட்டி. வரலாற்று ஆசிரியரான இவர், பாடம் நடத்துகையில் தனது வகுப்பறையில் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை காட்டியதாக கூறப்படுகிறது. இதில் முஸ்லீம் மாணவரான அப்துல்லா அன்சோரவ் (18) கோபமடைந்து ஆசிரியரை கொடூரமாக தாக்கி தலையை வெட்டிக் கொலை செய்தார்.

இந்தப் பிரச்னை தற்போது மத பிரசனையாக மாறும் அளவுக்கு சென்றுள்ளது. பிரான்ஸ் நாடே இந்த செயலால் கொதிப்படைந்துள்ளது. மேலும், ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இது இஸ்லாமிய பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு இஸ்லாமிய பயங்கரவாதம், வன்முறைக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதி கூறியுள்ளார். அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது வரை இந்த வழக்கில், 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் உட்பட, பத்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொலையாளியான சிறுவன் அப்துல்லாவுடன் தொடர்பிலிருந்ததாக கூறி பிரான்ஸ் நாட்டு இளைஞர் ஒருவரும், செசன்ய நாட்டு இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரில் ஒருவருடன் 17 வயது சிறுமி தொடர்பு வைத்திருந்திருந்ததாக கூறி அந்த சிறுமியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் மத வன்முறையாக மாறி பிரான்ஸை உலுக்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் -இ-முகமது அமைப்பு கொலை மிரட்டல் விடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ஷ் -இ-முகமது அமைப்பின் ஆன்லைன் இதழான அல்-கலாமில் ஒரு கட்டுரையில், ``இன்று இல்லையென்றால், நாளை, நாளை இல்லையென்றால், நாளை மறுநாள். நபியின் நினைவாக தியாகங்களைச் செய்ய மேக்ரானும், அவரைப் போன்றவர்களும் தயாராக இருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த பகிரங்க மிரட்டல் பிரான்ஸ் நாட்டில் கூடுதல் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

More News >>