திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கடற்கரையிலேயே நடக்கும் : அரசு உறுதி

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வு கடற்கரையிலேயே நடைபெற உள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. திருச்செந்தூரை ராம்குமார் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறுவது வழக்கம், இந்த விழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகள் கோவிலின் உள்ளே உள்ள மண்டபத்தில் நடைபெறும் என கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. திருவிழாவானது பாரம்பரிய முறைப்படி நடைபெற வேண்டும்.

சூரசம்ஹாரம் கடற்கரையிலும் திருக்கல்யாணம் திருக்கல்யாண மண்டபத்திலும் பொதுமக்களின்றி பாரம்பரிய முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் சூரசம்ஹார நிகழ்வு கடற்கரையிலேயே நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என தெரிவித்தார். கோவில் நிர்வாக தரப்பில் திருக்கல்யாண நிகழ்வும், விதயஹர்தாவின் அறுவுறுத்தலின் படி 108 மகாதேவர் சன்னதியில் நடைபெற உள்ளது தெரிவித்தார்.

நீதிபதிகள், இந்த நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கக்கூடாது. கொரோனா தொற்று பரவி வரும் சூழலில், பொதுமக்களின் பங்கேற்பின்றி, சூரசம்ஹாரம் நிகழ்வை நடத்த வேண்டும். பக்தர்கள் நிகழ்வை காணும் வகையில், அனைத்து தொலைக்காட்சிகளும் நிகழ்வை ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

More News >>