ஆயிரம் கோடி கடன் வாங்கியவர்களை விட்டுவிட்டு சிறு கடன் பெற்றவர்களை துன்புறுத்தும் வங்கிகள் : உயர்நீதிமன்றம் கண்டனம்

ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை விட்டு விட்டு குறைவான தொகை கடன் பெற்றவர்களை வங்கிகள் ஆட்களை வைத்து மிரட்டுகின்றன. இந்த போக்கு மாறவேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வங்கி கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததைத் திரும்பப் பெறக் கோரி வழக்கு. பெரம்பலூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு. திருச்சியில் உள்ள ஃபெடரல் பாங் கில் நீண்ட கால கடனாக ரூ. 50 லட்சம் மற்றும் வீட்டுக் கடனாக ரூ. 15 லட்சம் விவசாய நிலங்களை அடமானம் வைத்து கடன் வாங்கினேன். இதில் வீட்டுக் கடனுக்காக 15 லட்சமும் நீண்ட கால கடன் தொகையில் 25 லட்சமும் திருப்பி செலுத்திவிட்டேன். தொழில் சரியில்லாததால் சரிவர பணம் கட்ட முடியவில்லை.

இதனால் எனது விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை வங்கி மேற்கொண்டது. விவசாய நிலத்தை விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த வழக்கில் ரூ 75 லட்சம் பணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 75 லட்சத்திற்கான டிராப்ட் உடன் சென்னையில் உள்ள வங்கி மேலாளரிடம் கொடுக்க அக்டோபர் 7ஆம் தேதி சென்றபோது வங்கி மேலாளர் அதனை வாங்க மறுத்து எங்கள் மீது வீசி எறிந்தார். மேலும் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகின்ற வேளையில் விவசாய நிலத்தை தனியாரிடம் ஒப்படைத்து பணம் வசூலிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே நீதிமன்ற உத்தரவை நடைபெற்றவும் தனியாரிடம் பாக்கி கடனுக்காக விவசாய நிலத்தை வேறு நபருக்கு கொடுப்பதை நிறுத்த வும் உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வங்கிகள் பணம் வசூலிக்க 3 விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும், அவர் களின் பதிலை வைத்துதான் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாய மற்றது. எந்த விதிகளின் கீழ் வங்கிகள் கடன் தொகை வசூலிப்பதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தனியார் நிறுவனங்கள் அடியாட்களை வைத்து கடனை வசூலிக்கின்றனர் இப்படி செய்வதை விட கடன் வழங்காமேலேயே இருக்கலாம்.

ஆயிரம் கோடி கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். சிறு கடன்கள் வாங்கிய ஏழைகளை வசூல் என்ற பெயரில் துன்புறுத்துகின்றனர். இந்த வழக்கில் நீதி மன்ற உத்தரவை மதிக்க முடியாது எனக் கூறி வரைவு காசோலையை தூக்கி எறிந்த வங்கியின் மேலாளர் கூறும் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வங்கி மேலாளர் காணொலிக் காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More News >>