ஜெயலலிதா நினைவு நாளில் சசிகலா ரிலீஸ்... சிறை நிர்வாகம் அறிவிப்பு?!

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவரது வக்கீல்கள் செலுத்தியுள்ளனர். வங்கி வரைவோலையை(டிடி )பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் வக்கீல்கள் சி.முத்துகுமார், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் செலுத்தினர். இதையடுத்து சசிகலா எப்போது விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பரில் அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியானது. இதற்கிடையே, சசிகலாவை தொடர்ந்து இளவரசி தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று இளவரசியின் தரப்பில் ரூ.10 கோடியே 10 ஆயிரத்திற்கான 6 வரைவோலைகளை அவரின் வழக்கறிஞர் அசோகன் சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி கே.சிவராமா முன்னிலையில் தாக்கல் செய்தார். நீதிபதி அதனை ஏற்ற நிலையில் அதை சிறைத்துறை நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 3 சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்றும் இதை கர்நாடக சிறை நிர்வாகம் வாய்மொழியாக கூறியுள்ளதாகவும், வரும் திங்கள்கிழமை அதிகாரபூர்வ உத்தரவை பிறப்பிக்கும் என்றும் அவரின் உறவினர்கள், நெருக்கமான நபர்கள் கூறியுள்ளனர். டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதாவின் நினைவுநாள் வருவதால் அன்றைய தினமும் சசிகலா வெளியே வர வாய்ப்பிருப்பதாகவும், அன்று ஜெயலலிதா சமாதியில் சசிகலா அஞ்சலி செலுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் திங்கள்கிழமை சசிகலா ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வமாக தெரிந்துவிடும் என்கிறார்கள்.

More News >>