தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் உடைகிறது? டி.ராஜேந்தர் தலைமையில் புதிய அமைப்பு..

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பர் வளாகத்தில் உள்ளது. முக்தா சீனிவாசன். கே.ஆர்.ஜி, ராமநாராயணன் போன்றவர்கள் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளனர். கடைசியாக நடிகர் விஷால் இச்சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து அவர் தலைமையிலான சங்கத்தைக் கலைத்துவிட்டுத் தனி அதிகாரி தலைமையில் சங்கத்தைச் செயலாற்ற அரசு உத்தர விட்டது. இதுகுறித்து விஷால் தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பேச்சு எழுந்த நிலையில் பாரதிராஜாவை ஒருமனதாகத் தேர்வு செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்காமல் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சங்கத்திலிருந்து பல தயாரிப்பாளர்கள் பிரிந்து சென்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் ஏற்படுத்தினர். அதன் தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழ்த் திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. தேர்தல் அதிகாரியாக நீதியரசர் ஜெயச் சந்திரன் கோர்ட்டால் நியமிக்கப்பட்டார். கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி தேர்தல் நடந்தது. என்.முரளி. டைரக்டர் டி.ராஜேந்தர். பி.எல் தேனப் பன் ஆகியோர் தலைமையிலான அணி போட்டியிட்டது. இதில் என்.முரளி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். புதிய நிர்வாகிகளுக்கு வெற்றி சான்று வழங்கும் விழா கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது. செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று புதிய நிர்வாகிகளுக்குச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதற்கிடையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் கள்ள ஓட்டுப்போடப்பட்டதாகத் தேர்தல் அதிகாரியிடம் டி.ராஜேந்தர் புகார் அளித்தார்.

தற்போது அவர் புதிதாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்குகிறார்.தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் அச்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வர உள்ளதாக இணையதளம் வாட்ஸ் ஆப்களில் தகவல் பரபரப்பாக வெளியாகி வருகிறது. இந்த புதிய சங்கத்தால் மீண்டும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உடையும் நிலை உருவாகி இருக்கிறது. ஆனால் இது குறித்த டி.ராஜேந்தர் தரப்பிலிருந்து இதுபற்றி இன்னும் உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.

More News >>