மதுரை வாழ்வியல் கதையில் 4 ஹீரோ, ஒரு ஹீரோயின்..

கொரோனா காலகட்டம் பட வெளியீட்டைத்தான் முடக்கி போட்டது. அதிலிருந்து திரையுலகம் இன்னும் முற்றிலுமாக மீளவில்லை. கடந்த நவம்பர் 10ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பெரிய படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறைவாக இருப்பதும் 50 சதவீத டிக்கெட் அனுமதி என்ற விதியும் முக்கிய காரணமாக இருக்கிறது. 100 சதவீத டிக்கெட் அனுமதிக்க அரசிடம் தியேட்டர் அதிபர்கள் கோரி வருகின்றனர். ஆனால் புதிய படங்களின் தொடக்கம் மட்டும் ஜரூராக நடந்து வருகிறது. கொரோனா காலகட்டத்திலேயே பல படங்கள் தொடங்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. கொரோனா தளர்வில் புதிய படங்கள் தொடங்குவது தொடர்கிறது. சென்னை என்றால் வடசென்னை, ஊர் என்றால் மதுரை இவைகளைமையமாக வைத்து பல்வேறு படங்கள் வந்துவிட்டன. இன்னமும் இந்த இடங்களை மையமாக வைத்து கதைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

அதற்கு காரணம் அங்கு அவ்வளவு கதைகள் கொட்டிக் கிடக்கிறது. அந்த வகையில் மதுரை வாழ்வியலை சொல்லும் மற்றொரு கதை திரைப்படமாக உருவாகிறது. டாக்டர் எஸ்.கேதார்நாத் சிவோம் புரடக்‌ஷன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் தற்போது பூஜையுடன் தொடங்கியுள்ளது. பெண்களுடைய வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் முருகானந்ததிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சந்தோஷ் பிரபாகரன் இயக்கவுள்ளார். கதையின் நாயகர்களாக இல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களாக நான்கு நாயகர்கள் களமிறங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் களம் நாயகன் மற்றும் நாயகியை சார்ந்து இல்லாமல் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மற்றும் மதுரையின் வாழ்வியலை மையப்படுத்தியும், பெண்கள் புரியும் சமூக சீர்திருத்ததை மையப்படுத்தியுமே உருவாக்கப்பட்டுள்ளது.

கதையின் நாயகியாக கன்னிகா களமிறங்குகிறார். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அழகான மதுரை மாநகரை சார்ந்த பின்னணியில் உருவாக உள்ள இந்த படத்தில் பல புதுமுக நடிகர் நடிகைகள் இணைந்துள்ளார். நாடோடிகள், தூங்காநகரம், அஞ்சாதே போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த சுந்தர் சி பாபு அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். கணேசபுரம், கல்தா போன்ற படங்களில் பணியாற்றிய வாசு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும் சீனு ராமசாமி மற்றும் பிரபு சாலமன் போன்ற முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றிய விஜய் தென்னரசு கலை வடிவமைப்பாளராக தனது பங்கினை அளிக்கவுள்ளார். இந்த படம் பூஜையுடன் இனிதே படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

More News >>