முகக்கவசம் போடாதவர்கள் கொரோனா மையத்தில் வேலை செய்ய உத்தரவு..

முகக்கவசம் போடாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கொரோனா மையங்களில் வேலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நோய், இந்தியாவில் பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. தற்போது கொரோனா உயிரிழப்புகளும், நோய் பரவலும் குறைந்து விட்டது. இதையடுத்து, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம்(மாஸ்க்) அணியாமல் அலட்சியமாக செல்கின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் விஷால் அவதானி என்பவர், அம்மாநில ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார். முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென அதில் கோரப்பட்டது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், தண்டனையாக கொரோனா சிகிச்சை மையத்தில் சேவை செய்ய அரசு உத்தரவிட வேண்டும். மருத்துவம் சாராத பணிகளில், குறிப்பாக சுத்தம் செய்தல், சமையல் செய்தல், குறிப்பேடு எழுதுதல் போன்ற பணிகளை செய்ய உத்தரவிட வேண்டும். குறைந்தது 5 மணி நேரம் வேலை செய்வதற்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக மாநில அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

More News >>