மேடையில் பாடி ஆட ஆசைப்படும் பிரபல நடிகை..

நடிகைகள் பலரும் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு நடிகை எப்போது மேடையில் ஆடி பாட நேரம் கிடைக்கும் என்று ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை எனப் பல படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. அடுத்து சூர்யா நடிக்க வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

ஆண்ட்ரியா கடந்த ஆண்டு தான் காதலித்து ஏமாற்றப்பட்ட அனுபவத்தை உருக்கமாக கூறி இருந்தார். தன்னை ஏமாற்றியவரின் பெயரையும் வெளியிடப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் அவர் அதுபற்றி பிறகு பேசவில்லை. காதல் தோல்வியிலிருந்து மீண்ட நிலையில் அவர் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

கொரோனா காலகட்டத்தில் தனிப் பாடல்கள் பாடியும் ஆல்பங்கள் வெளியிட்டும் ரசிகர்களைக் கவர்ந்து வந்தார். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததுடன் நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா, அரண்மனை3, பிசாசு 2 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனாலும் ஆண்ட்ரியாவுக்கு ஒரு மனக்குறை இருந்து வருகிறது. ஆண்ட்ரியா மேடைகளில் ஆங்கில பாடல்கள் பாடி வருகிறார். அதுபோல் பாடல்கள் பாடி வெகு நாள் ஆகிவிட்டதாக கவலை தெரிவித்திருக்கிறார். இதுபற்றி ஆண்ட்ரியா கூறும் போது,மேடையில் நான் பாடல்கள் பாடி நீண்ட நாள் ஆகிவிட்டது. மேடைகள் தான் எனது சந்தோஷமான இடம் .

மீண்டும் மேடை ஏற என்னால் நீண்ட நாள் காத்திருக்க முடியாது. விரைவில் மேடைக்கு வந்து பாடுவேன். என் இதயத்தில் நிறைந்திருக்கும் பாடல்களைச் சீக்கிரமே பாடுவேன். வரும் 2021ம் ஆண்டுகளில் எனக்கு அந்த வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு நல்ல ஆண்டாக அமையும் என்றார்.மேலும் தனது மேடை பாடல் அனுபவங்களை மீண்டும் அசைபோடும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய மேடையில் பாடி ஆடும் படங்களை வெளியிட்டிருக்கிறார் ஆண்ட்ரியா.

More News >>