நீங்கள் கொடுக்கும் உணவு வேண்டாம்... அதிகாரிகளை நடுங்க வைத்த விவசாயிகள்!

10வது நாளை எட்டியிருக்கிறது விவசாயிகளின் போராட்டம். மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்து டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டுள்ளனர் விவசாயிகள். இவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. சர்வதேச அளவிலும் போராட்டம் கவனம் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுடன் மத்திய அரசு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று 5வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.

நேற்றைய பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் அரசு கொடுத்த உணவை சாப்பிட மறுத்து, தாங்கள் கொண்டுவந்த உணவையே சாப்பிட்டனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இன்று அதேபோல், அரசு கொடுத்த உணவை சாப்பிட மறுத்து தாங்கள் கொண்டுவந்த உணவையே சாப்பிட்டுள்ளனர். பேச்சுவார்த்தை இடத்துக்கு தங்கள் சமைத்த உணவை தனி வாகனம் மூலம் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் இன்றைய பேச்சுவார்த்தையின்போது, தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுதான் வேண்டும் என்றும், அரசு உத்தரவாதம் தேவையில்லை என்றும் கறாராக தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே வைக்கப்பட்ட கோரிக்கைகள் மீது அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று அதிகாரிகளை கேள்வி கணைகளால் துளைத்தெடுத்துள்ளனர் விவசாயிகள். எனினும் அரசு கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து வருவதாகவும், இன்றைய பேச்சுவார்த்தை நல்ல முடிவைக் கொண்டுவரும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

More News >>