மான்வேட்டை வழக்கு: சல்மான்கான் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான்கான் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார். ஆனால், இவர் பல்வேறு பிரச்னைகளில் சிக்கியதை அடுத்து, பல்வேறு வழக்குகளும் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத்” என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த 1998ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது. அப்போது, அன்று இரவு இரண்டு அரிய வகை மான்களை சல்மான்கான் வேட்டையாடியாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, ஜோத்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதிகட்ட வாதம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி நடைபெற்று, அரசு தரப்பிலான வாதம் அக்டோபர் 23ம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து, சல்மான்கான் தரப்பு வாதம் கடந்த அக்டோபர் 28ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் 24ம் தேதியுடன் நிறைவுப் பெற்றதை அடுத்து, ஏப்ரல் 5ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது.இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று ஜோத்பூர் நீதிமன்றத்தின் நீதிபதி அறிவித்தார். இதில், இந்த வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என்றும் குற்றம்சாட்டப்பட்ட மற்ற அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டது. குற்றவாளியாக சல்மான்கான் அறிவித்ததை அடுத்து, அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>