அரசு பணிக்கு காத்திருக்கும் 63 இலட்சம் பேர்!

இன்றைய இளைஞர்களுக்கு அரசு வேலையென்பது பெரிய கனவாகவே உள்ளது. ஒவ்வொரு வருடமும் பல இலட்சம் இளைஞர்கள் பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டபடிப்பு முடித்து வெளியேறுகின்றனர். அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பு என்பது அரசு துறையிலும், தனியார் துறையிலும் இருந்தாலும் பலரின் விருப்பம் என்னவோ அரசு வேலையாகவே உள்ளது. எனவே அரசு வேலைவாய்ப்பு அலுவலுகங்களில் பதிவு செய்யும் நபர்களின் எண்ணிக்கை ஆண்டாண்டுக்கு உயர்ந்து கொண்டே உள்ளது. தனியார் மற்றும் அரசு தரப்பில் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது அரசின் பெரிய தோல்வியாகவே உள்ளது. எந்த கட்சிகள் ஆட்சியமைத்தாலும் வேலையின்மையை எந்த அரசாலும் சரிவர நிவர்த்தி செய்ய முடியவில்லை.

இந்நிலையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை மட்டும் 63 இலடசத்தை தாண்டியுள்ளது. பத்தாம் வகுப்பு முதல் அவரவரின் கடைசி கல்வி தகுதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்கள் தங்களின் பதிவை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ள வேண்டும். இதனால் அவரவர்களின் பதிவு மூப்பு பாதுகாக்கப்படும். இந்நிலையில் 30-11-2020 ன் நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் 63 இலட்சத்து 41 ஆயிரத்து 639 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 915 பேர் கல்வியியல் (B.Ed) பட்டதாரிகள். முதுகலை பட்டாதரிகள் 2 இலட்சத்து 21 ஆயிரத்து 337 பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த பொறியில் பட்டதாரிகள் மட்டும் 2 இலட்சத்து 6 ஆயிரத்து 807 பேர் ஆவார். ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 447 பேர் இடைநிலை ஆசிரியர்கள் ஆவர். இதில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, எந்த வேலையும் இல்லாதபட்சத்தில் அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாத உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

More News >>