தமிழருவி மணியன் மீது ரஜினிக்கு அதிருப்தியா..? ஸ்டாலின் சொன்ன ரகசியம்..

தமிழருவி மணியனை அரசியல் ஆலோசகராக வைத்து கொண்டதற்கு இப்போது ரஜினி கவலைப்படுகிறார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை உள்பட பல்வேறு நிவாரணப் பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்பின், அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது, அவரிடம் ரஜினி கட்சி தொடங்குவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ரஜினிகாந்த் முதலில் கட்சியை தொடங்கட்டும். அவரது கட்சியின் கொள்கைகள் குறித்து அறிவிக்கட்டும். அதற்கு பிறகு எனது கருத்தைச் சொல்கிறேன் என்றார்.

தொடர்ந்து நிருபர்கள், திமுகவுடனும், அதிமுகவுடனும் ரஜினி ஒரு போதும் கூட்டணி சேர மாட்டார் என்று தமிழருவி மணியன் கூறியிருக்கிறாரே? என்று கேட்டனர். அதற்கு ஸ்டாலில் கூறுகையில், ரஜினி அப்படி எதுவும் சொன்னதாக எனக்கு தகவல் வரவில்லை. தமிழருவி மணியனை போய் அரசியல் ஆலோசகராக வைத்து கொண்டு விட்டோமே என்று அவர் கவலைப்படுவதாகவே எனக்கு தகவல் வந்தது என்று கிண்டலடித்தார். இதைக் கேட்ட நிருபர்கள் வாய் விட்டு சிரித்தனர். தொடர்ந்து ஸ்டாலின் கூறுகையில், விவசாயிகள் போராட்டத்துக்கு திமுக தொடர்ந்து ஆதரவு அளிக்கும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

More News >>