தமிழகத்தில் தேர்தலுக்கு முன் நில அபகரிப்பு தடை சட்டம் நிறைவேற்ற உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்

திருச்சியைச் சேர்ந்த முத்தையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே எனது நிலம் உள்ளது. அதற்கான பட்டா எனது தந்தை பெயரில் கடந்த 1973ம் ஆண்டு வாங்கப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு தனி நபர்கள் சிலர் எனது நிலத்தைச் சட்டவிரோதமாகப் பெயர் மாற்றம் செய்ய முயற்சித்தனர்.

இது குறித்து துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் திருச்சி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது,பின்னர் வழக்கு துறையூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது நீதிமன்றத்தில் வழிகாட்டுதலின் படி மாவட்ட குற்றவியல் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

இது போன்று பல தனி நபர்கள் மற்றவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தங்களது பெயருக்கு நிலத்தைப் பதிவு செய்து கொள்கின்றனர்.இது போன்ற நில அபகரிப்பு தமிழகத்தில் பெருமளவு நடந்து வருகிறது. பிற மாநிலங்களைப் போல நில அபகரிப்பு தடுப்பு சட்டம் தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் நிலம் அபகரிப்பு செய்யும் நபர்களிடம் இருந்து நிலத்தைக் காப்பாற்ற முடியும், எனவே ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் ஆகிய மாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் நில அபகரிப்பு தடுப்பு சட்டத்தை நிறைவேற்றித் தனி நபர்களிடம் இருந்து நில அபகரிப்பைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போல் நில அபகரிப்பு தடை சட்டம் தமிழகத்தில் தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்துகிறது.பொது மக்களின் நலன் கருதி இந்த சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

More News >>