மகளை சரமாரியாக வெட்டிய தந்தை

காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கத் தாமதமானதால் 17 வயதான பிளஸ் டூ படிக்கும் மகளைச் சரமாரியாக வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கருகச்சால் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (48). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 17 வயதில் அகிலா என்ற ஒரு மகளும் உள்ளனர்.அகிலா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.

பாபு குடி போதைக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று மனைவி மற்றும் மகளை அடித்து உதைப்பது இவரது வழக்கம். இதனால் பெரும்பாலான நாட்களில் இவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்பது உண்டு. இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் அகிலா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுந்திருக்கும் படி பாபு பலமுறை கூறியும், அகிலா படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சமயத்தில் பாபுவின் மனைவி வெளியே சென்றிருந்தார்.

ஆத்திரமடைந்த பாபு, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகள் அகிலாவின் தலையில் ஓங்கி வெட்டினார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அலறியடித்தபடியே படுக்கையை விட்டு எழுந்த அகிலா தந்தையிடமிருந்து தப்பித்து ஓட முயற்சித்தார். அப்போது மீண்டும் அவரை பாபு வெட்டினார். இதில் அகிலாவின் வலது கை விரல் துண்டானது. அங்கிருந்து ஓடிய அகிலா பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்தார். பக்கத்து வீட்டினர் உடனடியாக அவரை முதலில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அகிலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாபுவை கைது செய்தனர்.

More News >>