நடிகை மேக்னா ராஜுக்கும், குழந்தைக்கும் கொரோனா தொற்று நலமுடன் இருப்பதாகத் தகவல்

தன்னுடைய குழந்தை மற்றும் பெற்றோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக மறைந்த பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அனைவரும் நலமாக இருப்பதாகவும், கடந்த சில வாரங்களில் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நட்சத்திரங்களான சிரஞ்சீவி சார்ஜாவும், மேக்னா ராஜும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்த ஜூன் 7ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாகச் சிரஞ்சீவி சர்ஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவர் இறக்கும் போது மேக்னாராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் மேக்னா ராஜுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மேக்னா ராஜின் தாய் பிரமீளா திடீர் உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் பிரமீளாவுக்கு மருத்துவமனையில் வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர் மட்டுமில்லாமல் மேக்னா ராஜ், அவரது மகன் மற்றும் தந்தைக்கும் கொரோனா பரவியுள்ளது.

இந்த தகவலை மேக்னா ராஜ் தன்னுடைய பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார். 'எனக்கும், பெற்றோருக்கும் என்னுடைய குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே எங்களுடன் கடந்த சில வாரங்களில் தொடர்பு இருந்தவர்கள் அனைவரும் சுய தனிமைக்குச் செல்லவேண்டும். நாங்கள் அனைவரும் உடல் நலத்துடன் உள்ளோம் என்று மேக்னா ராஜ் தன்னுடைய பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

More News >>