சிவாஜியை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது.. நடிகர் நாசர் ஆவேசம்..

நடிகர் திலகம் சிவாஜி பற்றி அரசியலில் சிலர் விமர்சனம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு நடிகர் சங்க முன்னாள் தலைவரும், பிரபல நடிகருமான நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :சிவாஜி ஐயா அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய வரம். பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேச வைத்ததிலும் திரை நடிப்பு கலையில் ஒரு புத்திலக்கணம் வகுத்தவர். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி தமிழ்த்திரை அப்படியொரு கம்பீரமான குரல் கேட்டதில்லை.

சிம்மக்குரல் என்பது சும்மா கொடுத்த பட்டமன்று. சமீபத்தில் பொழுதுபோக்கு என்ற பெயரில், அவர் குரலையும் நடிப்பையும் மலிதாய் பயன்படுத்தியது அவர் பால் அன்பும், மரியாதையும் கொண்ட அத்தனை பேர் மனதையும் புண்படுத்திக் கொண்டிருக்கிறது. தேர்தல் காலமது நெருங்கி வருகின்ற இவ்வேளையில் , திரைத்துறையில் இருந்து பலரும் அரசியல் களமிறங்குகின்றனர். சிவாஜி ஐயாவின் அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, அரசியல் விமர்சகர்கள் கீழ்த்தனமாய் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. அவரது அரசியல் பயணம் நீண்ட வரலாறு. பெரும் தலைவர்களோடு பழகியும், புரிந்தும் வந்தவர் . அவர் என்றும் கள்ளம் கபடமற்று மக்களுக்கானவராய் இருந்து வந்தார். இனியும் அவர் பெயரைக் கண்டபடி பயன்படுத்தாதிருக்க வேண்டுமென்று ஒட்டுமொத்த நடிகர் சமூகத்தின் சார்பாகத் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு நாசர் கூறினார்.

சமீபத்தில் நடிகர் சங்கத்தில் நடந்த தீ விபத்தைப்பற்றி அவரிடம் கேட்ட போது "அது விபத்து தான் என்றும் முக்கிய ஆவணங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறதென்றும் உரிய நேரத்தில் கடமையாற்றிய தீயணைப்பு துறைக்கும் அரசு பொறுப்பு அதிகாரிக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

More News >>