தேசிய நெடுஞ்சாலை தடுப்புகள் தனியார் விளம்பரங்களை வந்தது எப்படி? உயர் நீதிமன்றம் கேள்வி..

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புக்களில் தனியார் விளம்பரங்கள் எந்த அடிப்படையில் இடம் பெற்றுள்ளது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள் எனப்படும் தடுப்பு சாதனங்கள், தற்போது பல விபத்துகளுக்குக் காரணமாக அமைகின்றன. 2019ஆம் ஆண்டு 57,228 நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 10 ஆயிரத்து 525 பேர் உயிரிழந்துள்ளனர். 67 ஆயிரத்து 132 பேர் காயமடைந்துள்ளனர்.

தொழிலகங்கள், நிறுவனங்கள் போன்றவை தங்கள் நிறுவனத்துக்கு முன்பாக உள்ள முக்கிய சாலைகளில் விளம்பரம் செய்யும் நோக்குடன் பேரிகார்டுகளை வைக்கின்றன. இந்த பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாததால் இரவு நேரங்களில் விபத்துகள் நடக்கக் காரணமாகிவிடுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும், பொது இடங்களிலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித்திரிவதைத் தடுக்கவும், நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றவும் எந்தெந்த இடங்களில் பேரிகார்டுகளை வைக்கலாம் என்பது குறித்து முறையான வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் என்ன வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன? சாலைகளில் பேரிகார்டு அமைப்பதில் தனியார் விளம்பரங்களை ஏன் வைக்கப்படுகின்றன? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணிக்க வேகம் நிர்ணயம் செய்வது தொடர்பாகவும் பேரிகார்டுகளில் உள்ள விளம்பரங்களை அகற்றுவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More News >>