அமெரிக்காவிலும் ஆசிரியர்கள் போராட்டம் - திகைக்கும் ட்ரம்ப்

அமெரிக்கா ஆசிரியர்கள் இந்த வாரம் முழுவதும் மிகப்பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது அதிபர் ட்ரம்புக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஆக்லஹாமா மாகாணத்தில் ஆசிரியர்களின் ஊதியம் கடந்த 10 ஆண்டுகளாக சற்றும் உயர்த்தப்படவில்லை என்பது உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒபாமா ஆட்சியிலும் சரி, அதற்கு முன்பு புஷ் ஆட்சியிலும் சரி, ஆக்லஹாமா உள்பட அமெரிக்கா முழுவதும் பள்ளிக் கல்விக்கான பட்ஜெட்டில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியில் படிப்படியாக 28 சதவீத அளவிற்கு வெட்டியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள டிரம்ப் நிர்வாகம் இன்னும் கடுமையாக பள்ளிக்கல்வி பட்ஜெட் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது. ஆசிரியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஒவ்வொரு மாணவருக்குமான கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு ஆகியவற்றை முற்றாக முடக்குவதற்கான முயற்சியில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் அமெரிக்காவின் ஆசிரியர் சமூகத்தை கடந்த 10 ஆண்டு காலமாகவே கொந்தளிப்புக்குள்ளாக்கி வந்தன. குறிப்பாக 2008 ல் ஏற்பட்டபொருளாதார நெருக்கடிக்கு பிறகு, அமெரிக்க ஆளும் வர்க்கம் மூன்று முக்கிய அம்சங்கள் மீது கை வைத்தது. அதில் முதலில் பலியானது அமெரிக்க கல்வித்துறையாகும்.

இதைத் தொடர்ந்து சுகாதாரமும் சமூக நலத்திட்டங்களும் குறி வைக்கப்பட்டு அவற்றுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் கடுமையாக வெட்டி சுருக்கப்பட்டன. இத்தகைய பின்னணியில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக, ஆசிரியர் சமூகத்தின் கொந்தளிப்பு, ஆசிரியர் - மாணவர் போராட்ட அலையாக எழுந்திருக்கிறது.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ச்சியாக 5ஆவது நாளாக ஏப்ரல் 6 அன்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆக்லஹாமா மட்டுமின்றி அரிசோனா, வாஷிங்டன், சிகாகோ, நியூயார்க், நியூஜெர்சி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

அனைத்துப் பகுதிகளிலுமே ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் களத்தில் இறங்குகிறார்கள். ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>