சூர்யா தயாரிப்பில் பிரபல நடிகர் மகன் அறிமுகமாகிறார்..

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார். இவரது பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் இளம் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் (2D Entertainment) நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் ஆர்.பி. பிலிம்ஸ் Films எஸ்.ஆர். ரமேஷ்பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர்.

இப்படத்தை சரோவ் சண்முகம் இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை அமரன் செய்கிறார் மற்றும் உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார். படம் குறித்து இயக்குனர் சரோவ் சண்முகம் கூறியதாவது: குழந்தைகளை மையப்படுத்திய குடும்ப படங்கள் ஹாலிவுட்டை ஒப்பிடும்போது நம் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானவை. நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் எப்போதும் அழகான கருத் துள்ள குடும்ப படங்களை உலகளவிலான ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் தந்து வருகிறது.

அந்த வகையில் இப்படமும் மிக அழகான குடும்பங்கள் ரசிக்கும் படமாக இருக்கும். மேலும் மாஸ்டர் ஆர்னவ் விஜய்யின் அறிமுகப் படத்தில் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சி. என்னைச் சுற்றிலும் நம்பிக்கை அலைகளும், நேர்மறையின்மையும் நிரம்பி இருக்கிறது. எனவே படத்திலும் அது வெளிப்படும் என நம்புகிறேன். இவ்வாறு இயக்குனர் கூறினார்.2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி இ ஓ ராஜ சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் கூறும்போது, குழந்தைகளை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஆர்னவ் விஜயை அறிமுகப்படுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இப்படம் அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும்.

இப்படத்தின் திரைக்கதை என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. இக்கதை ஒரு சிறுவனுக்கும் அவனது நாய்க்குட்டிக்கும் உள்ள அழகான உறவை அவர்களுக்கிடையேயான அன்பையும், உணர்வையும் வெளிப்படுத்தும் படம் என்றார்.இப்படத்தின் மொத்த கதையும் ஊட்டி பின்னணியில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் நடிகர் பட்டாளம் நடிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 14) பூஜையுடன் தொடங்கப்பட்டது.

More News >>