தங்க கடத்தல் வழக்கு கேரள முதல்வரின் செயலாளர் நாளை ஆஜராக உத்தரவு

தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத்துறை 4வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு முன் 3 முறை நோட்டீஸ் கொடுத்த போதிலும் உடல் நலமில்லை என்று கூறி இவர் ஆஜராகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தங்கக் கடத்தலில் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் உட்பட பல்வேறு முறைகேடுகளில் இவர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக சிவசங்கர் தெரிவித்தார்.

இதையடுத்து ரவீந்திரனிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது. இதன்படி விசாரணைக்கு ஆஜராகக் கோரி கடந்த மாதம் 6, 27 மற்றும் இந்த மாதம் 10 ஆகிய தேதிகளில் முறை மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்தது.ஆனால் 3 முறையும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. முதலில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் 2 முறை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி நோட்டீஸ் கொடுத்த போதிலும், உடல் நலமில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்தார். இதனால் 3 முறையும் அமலாக்கத் துறையால் ரவீந்திரனிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் 4வது முறையாக நாளை விசாரணைக்கு ஆஜராகக் கூறி மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. இம்முறையும் அவர் ஆஜராகாவிட்டால் மத்திய அமலாக்கத் துறை அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் தனக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய அமலாக்கத் துறை விசாரணைக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி ரவீந்திரன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

More News >>