27ம் தேதி முதல் மாநிலம் தழுவிய ஸ்டிரைக் : லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டு கருவிகளுக்கும், ஜி.பி.எஸ் கருவிகளுக்கும் பல நிறுவனங்களில் அனுமதி அளித்தல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் தயாரிக்கும் 49 நிறுவனங்களுக்கு அப்ரூவல் உள்ளது.

ஆனால் 12 நிறுவனங்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வாகன உரிமை புதுப்பித்தலை அனைத்து பகுதிகளிலும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் டீசல் மீதான வாட் வரியை வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வரும் 27ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இந்த போராட்டத்தில், 4.5 லட்சம் கனரக வாகனங்கள், 6 லட்சம் சிறிய வாகனங்கள் பங்கேற்கும்.

வரும் 27ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் எந்த ஒரு லாரியும் இயங்காது. இதில் மருந்து, பால் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும். இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். போக்குவரத்து துறை அதிகாரிகள் பலரும் லஞ்சம் பெற்று வருகின்றனர். சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் சோதனை நடத்தி லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றார்.

More News >>