கல்லூரி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று காலை சேலம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பிரசவ வார்டு மற்றும் கொரோனா வார்டுகளில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் பின்னர் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது.

75 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்ததில் ஆயிரத்து நூறு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இறப்பு சதவீதம் 1 சதவிகிதத்திற்குக் கீழும் நோய்த்தொற்று 2 சதவீதமாகவும் குறைந்துள்ளது. அதையும் ஜீரோவாக மாற்றும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். கல்லூரி விடுதிகள், உணவு விடுதிகளில் 20 பேருக்கு மேல் தங்கக் கூடாது, கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐஐடில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரானா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.மேலும் கல்லூரி ஆய்வகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் மாணவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்துத் தள்ளி நிற்க வேண்டும், ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுக்கது. ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கொரோனோவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மனநல சிகிச்சை அந்தந்த அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் தெரிவித்தால், அங்கு உடனடியாக ஆய்வு நடத்தி அந்த மருத்துவமனையின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

More News >>