டிவிட்டரில் மஸ்தானி என பெயரை மாற்றிக்கொண்ட தீபிகா..

நடிகை தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த அனிமேஷன் மோஷன் கேப்சர் படமான கோச்சடையான் படத்தில் நடித்தார். இந்தி திரையுலகத்தில் கமர்ஷியல் நாயகியாக மட்டுமல்லாமல் தன்னை ஒரு நடிப்பு திறன் மிக்க கதாபாத்திரங்களிலும் ஈடுபடுத்திக் கொண்டு நடித்து வருகிறார் தீபிகா. பத்மாவத் என்ற படத்தில் போர்க்குணம் கொண்ட ராணியாக வேடம் ஏற்றார். இப்படத்தில் நடித்த போது பல்வேறு அரசியல் சர்ச்சைகள் தீபிகாவை சூழ்ந்தது எல்லாவற்றையும் எதிர்கொண்டதுடன் பதிலடியும் கொடுத்தார். பின்னர் அவர் பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்தார்.

முஸ்லிம் மன்னரின் பெண்ணான தீபிகா இந்து மன்னர் பாஜிராவை காதலித்து அவருக்கு ஒரு குழந்தையும் பெறும் கதாபாத்திரத்தில் நடித்தார். அப்படம் வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது. அதனை தீபிகா கொண்டாடியிருக்கிறார். தீபிகா படுகோனே என்ற தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தையே தன் பெயருக்கு பதிலாக மஸ்தானி என்ற தனது பட கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு படத்திலிருந்து பல நினைவுகளை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இருக்கும் அரிய படங்களும் வெளியிட்டுள்ளார். காதலோ, போரோ எதுவாக இருந்தாலும் துணிந்து நிற்பதே மஸ்தானியின் குணம். தனது விதியை எழுதுவதில் யாருக்கும் பயப்படாதவள்.

அது எத்தகைய கடினமான பாதையாக இருந்தாலும் அதுபற்றி கவலைப்படமாட்டாள். அவள் யாருக்கும் தலை வணங்காதவள். காதலுக்கு வரும் எதிர்ப்புகளை துணிவுடன் எதிர்கொள்கிறாள். தன் பெயரையும் காதலன் பெயரையும் இணைக்க உயிரையும் தருபவள் என தீபிகா உணர்ச்சிவசப்பட்டு தான் நடித்த மஸ்தானி கதாபாத்திரம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர் ஒருவர் வரைந்த தனது மஸ்தானி தோற்ற படத்தையும் தீபிகா பகிர்ந்தார். தீபிகா போலவே அப்படத்தில் பாஜிராவாக நடித்த ரன்வீர் சிங்கும் தனது படத்தின் 5 வருட நிறைவு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பாஜிராவ் மஸ்தானி படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்று 356 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இதன் பட்ஜெட் மொத்தம் 145 கோடி ஆகும். சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகையாக தவி அஸ்மி உள்ளிட்ட விருதுகளுடன் தேசிய விருதினை இப்படம் வென்றது. தீபீகா படுகோன் ஆரம்ப கால கட்டத்தில் ரன்பீர் கபூரை காதலித்தார். அவருடன் பிரேக் அப் ஆன பிறகு ரன் வீர் சிங்குடன் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். சமீபத்தில் தீபிகா படுகோனே மீது போதை மருந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணைக்கும் நேரில் சென்று ஆஜரானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் தீபிகா. இந்த ஆண்டில் 83 உள்ளிட்ட 3 இந்தி படங்களில் நடிக்கிறார்.

More News >>