இந்தியாவில் அதிக சம்பளம் பெற்ற ஒரே நடிகர்..

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் அதிக சம்பளம் பெறும் 100 பேர்களின் பட்டியலை அமெரிக்க பிஸ்னஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. 2020ம் ஆண்டில் உலக அளவில் அதிக சம்பளம் பெற்றவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை பொருத்தவரை அதிக சம்பளம் பெற்ற நடிகராக முதலிடத்தை அக்ஷய்குமார் பிடித்திருக்கிறார். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் எனப் பலரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அக்‌ஷய்குமார் இந்திய அளவில் முதலிடம் பிடித்திருப்பது திரையுலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

படங்களில் நடிப்பதில் கிடைப்பதை விட விளம்பர படங்களில் நடிப்பதற்காகப் போடும் ஒப்பந்தம் அக்‌ஷய்குமாரை டாப் லிஸ்ட்டில் கொண்டு வந்திருக்கிறது.மேலும் கொரோனா கால கட்டம் பல நடிகர்களைச் சம்பாதிக்க முடியாமல் வீட்டிலேயே முடக்கிப் போட்டு விட்டது. வருமானத்துக்காக ஆசைப்பட்டு யாரும் வெளியில் வராமல் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து வந்தனர். இதனால் அவர்களுக்கு கோடிகளில் இழப்பு என்பதை மறுப்பதற்கில்லை.

அக்‌ஷய் குமார் இந்திய அளவில் முதலிடம் பிடித்த நிலையில் உலக அளவில் 100 பேர்கள் பட்டியலில் 52வது இடத்தை பிடித்திருக்கிறார். அவரது 2020ம் ஆண்டு வருமானம் 48.5 மில்லியன் டாலர் அதாவது சுமார் 356 கோடி ரூபாய் வருமானம் பெற்றிருக்கிறார். இவர் பச்சான் பாண்டே, பெல் பாட்டம், சூரியவானிஷி, பிரித்விராஜ், அட்ரங்கி ரே, ராம் சேது மற்றும் ரக்‌ஷ பந்தன் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதிக சம்பளம் பெறும் பட்டியலில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஹிருத்தி ரோஷன், ரன்வீர் சிங் போன்றவர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.உலக அளவில் முதலிடத்தை அமெரிக்க மாடல் அழகி, தொழில் அதிபர் கயிலி ஜென்னர் பெற்றிருக்கிறார். அமெரிக்க டாலர் 590 மில்லியன் அவர் ஈட்டியிருக்கிறார். இந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் மற்றும் ரோஜர் ஃபெட்ரெர், கிறிஸ்டினோ ரொனால்டோ போன்றவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

More News >>