சினிமாவிலிருந்து விலக நடிகையை கணவர் வற்புறுத்தினாரா?

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுகிறார்கள். நடிகைகள் நஸ்ரியா, ஜெனிலியா போன்றவர்கள் இந்த முடிவை எடுத்தனர். அவர்களுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தாலும் ஏற்க மறுத்துவிடுகிறார்கள். ஆனால் சமந்தா, ஸ்ரேயா, சிம்ரன் போன்ற நடிகைகள் திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் தொழில் அதிபரைத் திருமணம் செய்துக் கொண்ட நடிகை காஜல் அகர்வாலும் தொடர்ந்து நடிப்பதாக அறிவித்ததுடன் திருமணம் ஆன ஒரு மாதத்தில் படப் பிடிப்புக்கும் வந்துவிட்டார். சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படப்பிடிப்பில் அவர் நடித்து வருகிறார்.

தமிழில் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் நடித்தவர் சனா கான். பயணம், ஆயிரம் விளக்கு, தம்பிக்கு இந்த ஊரு போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் இந்தி படங்களில் நடிக்கச் சென்றபோது பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. பிறகு சல்மான் கானை சந்தித்தார். அவர் நடத்திய பிக்பாஸ் இந்தி ஷோவில் பங்கேற்றார். அவருடன் ஒரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆகி இருந்தபோதும் சனாவுக்கு பட வாய்ப்புகள் கைகூடவில்லை.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தான் சாமியார் ஆகிவிட்டதாகவும் சினிமாவிலிருந்து விலகி மனித குலத்துக்கு சேவை செய்யப்போகிறேன். இது எனது ஆண்டவனின் ஆணையாக ஏற்றிருக்கிறேன் என்று அதிரடியாக அறிவித்து சாமியார் தோற்றத்தில் புகைப்படங்களும் வெளியிட்டார். இந்நிலையில் கடந்த மாதம் சனா கான், அனாஸ் சயித் என்ற இஸ்லாம் மதகுரு ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு அதிர்ச்சி தந்தார். மக்களுக்குச் சேவை செய்யப் போகிறேன் என்று கூறி நடிப்புக்கு முழுக்கு போட்ட சனா கான் தற்போது கணவருடன் காஷ்மீருக்கு தேனிலவு பயணம் சென்றிருக்கிறார். காஷ்மீருக்கு விமானத்தில் செல்லும் புகைப்படத்தை பகிர்ந்த சனாகான் பிறகு காஷ்மீரில் குல்மார்க் பனி மலையில் பனியில் நனைந்த படி ஜில் சுகத்தை அனுபவிக்கும் மகிழ்ச்சியான படத்தையும் வெளியிட்டார்.

சாமியார் ஆவதாகக் கூறிச் சென்ற சனா கான் இவ்வளவு ஆசையை மனதில் வைத்திருந்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிப்புக்கு அவர் முழுக்கு போட அவரது கணவர் வற்புறுத்தினாரா என்ற கேள்வி எழுந்தது. அதற்குக் கணவர் அனாஸ் பதில் அளித்தார். நான் சனாகானை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினேன். அவர் அதை நிறைவேற்றி கொடுத்தார். சினிமா விலிருந்து சனாகான் விலகுவதாக அறிவித்தது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. அவரை நான் சினிமாவிலிருந்து விலக சொல்லவில்லை. அது அவராக எடுத்த முடிவு. ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிஜம், சனாவை தவிர வேறு யாரையாவது நான் திருமணம் செய்திருந்தால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டேன் என்றார் அனாஸ்.

More News >>