சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பரவல்..

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று(டிச.20) 50க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்நோய் வேகமாகப் பரவியது.

கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு புதிய நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழக அரசு நேற்று(டிச.20) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1114 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6891 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1198 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 85,315 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 15 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,983 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9593 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னை(325பேர்), செங்கல்பட்டு(81பேர்), திருவள்ளூர்(57பேர்), திருப்பூர்(52பேர்) மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி போன்ற பல மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுப்பட்டுள்ளது.சென்னையில் இது வரை 2 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கும், கோவையில் 51 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டில் 49 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

More News >>