நாகர்கோவில் வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற புறக்கணிப்பின் போது வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் மீது நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.8ல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. அப்போது, சிவக்குமார் என்ற வழக்கறிஞர் மட்டும் நாகர்கோவில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராகியுள்ளார். இதனால், அவர் வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட். செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து சிவக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து சிவக்குமாரை சஸ்பென்ட் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் வழக்கறிஞர்கள் தொழிற்சங்கத்தினரைப் போல போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. ஏனெனில், இந்த தொழில் மிகவும் புனிதமானது. ஆனால், தற்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

சில சங்கங்கள் அரசியல் மற்றும் ஜாதி ரீதியான காரணங்களுக்காக கூட போராடுகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர்களின் போராட்டம் சட்ட விரோதமானது. தனது கட்சிக்காரருக்காக மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். எனவே, அவர் மீதான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் தமிழ்நாடு பார்கவுன்சில் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அடுத்த மாதம் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More News >>