ஜனவரியில் ரஜினி கட்சி.. மதுரையில் துவக்கவிழா..

ரஜினி அடுத்த மாதம் மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி, தனது கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் டிச.31ம் தேதி தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். கடந்த 25 வருடமாக அரசியலுக்கு வருவதாக போக்கு காட்டி வந்த ரஜினிகாந்த், டிச.3ம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டார். ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல. வரப் போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும் என்று கூறியிருந்தார்.

அதற்கு பிறகு அவர் அளித்த பேட்டியில், அண்ணாத்தே படத்தை முடித்து கொடுத்து விட்டு கட்சிக்கு வருவேன். கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்துள்ளேன். தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை நியமித்துள்ளேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்தில் ரஜினிகாந்த் பெயரில் ஒரு புதிய கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு மக்கள் சேவைக் கட்சி என்று பெயரிடப்பட்டு, ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவிக்காத ரஜினி மக்கள் மன்றம், முறையான அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில், ரஜினி மன்ற நிர்வாகிகள் தற்போது பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனத்தை முடித்துள்ளனர்.

இந்த நியமனத்தில் பணம் வாங்கிக் கொண்டு பொறுப்பு தரப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அதை மன்ற நிர்வாகிகள் மறுத்தனர். தற்போது மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டுள்ளனர். ரஜினி தனது கட்சியை மதுரையில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி, அங்கு அறிவிக்கப் போவதாக தெரிய வந்துள்ளது. அந்த பொதுக் கூட்டத்தில்தான் அவர் தனது கட்சிப் பெயர், கொடியை அறிமுகப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்ததும் ஜனவரி 3வது வாரத்தில் அவர் கட்சியைத் தொடங்குவார் என்றும் அதன் பின்னர் முக்கிய நகரங்களுக்கு அவர் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் பேச்சு அடிபடுகிறது. தற்போது ஐதராபாத்தில் அண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி இருக்கிறார். அவர் டிச.30ம் தேதிக்குள் படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>