கொரோனா வைரஸ்: அண்ணாத்த படப்பிடிப்பு திடீர் ரத்து.. ரஜினி இன்று சென்னை திரும்புகிறார்...

கடந்த மாதம் கட்சி தொடங்குவது பற்றி அறிவித்தார் ரஜினி காந்த், டிசம்பர் 31ம் தேதி புதிய கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பதாகவும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும் கூறினார். அதன்பிறகு அவர் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடக்கும் ஷுட்டிங்கில் பங்கேற்று நடித்து வந்தார். படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பாதுகாப்பு கவச அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரஜினி காந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு பயோ பப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. மற்ற டெக்னீஷியன், பணியாளர்களுக்கும் கொரோனா விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டன, அண்ணாத்த படப்பிடிப்பை வேகமாக முடிக்க திட்டமிட்டுள்ளனர். ரஜினிகாந்த்தும் முழு ஒத்துழைப்பு அளித்து காலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணிவரை சுமார் 14 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். டிசம்பர் 30ம்தேதி படப்பிடிப்பிலிருந்து சிறிய பிரேக் எடுத்துக் கொண்டு சென்னை வருவதாக இருந்தது.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இன்று மாலை ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. மற்றொரு தகவலாக ரஜினிகாந்த்துக்கு உடல் நலமில்லை என்றும் அதனால் படப்பிடிப்பு ரத்தாகி இருப்பதாகவும், படக்குழு சென்னை திரும்புவதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.சென்னை வந்ததும் ரஜினி காந்த் தன்னை சில நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறார். கட்சி பற்றிய ஆலோசனைகளை அவர் போன் அல்லது வீடியோ காணொலி மூலம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.இந்நிலையில் திட்டமிட்டபடி வரும் 31ம் தேதி புதிய கட்சி தொடங்குவது பற்றிய தேதி அறிவிக்க உள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் ஷூட்டிங் புறப்பட்டுச் செல்வாரா அல்லது ஜனவரிக்குப் பிறகு படப்பிடிப்பு செல்வாரா என்பதுபற்றி முடிவாக வில்லையாம்.இதற்கிடையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்தல் பிரசார பணிகளை தொடங்குவதற்காக ரஜினியிடமிருந்து அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

ரஜினி தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வாரா? அல்லது குறிப்பிட்ட நகரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்பாரா என்பது குறித்து ஆலோசனை நடக்கிறது. ரஜினியின் உடல்நிலை கருதியும், கொரோனா தொற்று பரவல் நீங்காத நிலையிலும் அவரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். ஆனால் அதையும் மீறி ரஜினி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே அளித்த பேட்டியில் என் உயிர் தமிழக மக்களுக்காகப் போகிறதென்றால் போகட்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்று மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்டுவேன் எனவும் கூறி இருந்தார். அவர் தேர்தலில் போட்டியிடுவாரா? மாட்டாரா? என்பதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

More News >>