புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்: முதல்வர் சம்மதம் கவர்னர் எதிர்ப்பு

கொரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி தமிழகத்தில் கடற்கரை மற்றும் சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதே வேளையில் , புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தார்.

இந்நிலையில், கவர்னர் கிரண்பேடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். தமிழகத்தில் கடற்கரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், அங்கிருந்து பலர் புதுச்சேரிக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே இங்குக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்தால் புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

புதுச்சேரியில் வழக்கமாக முதலமைச்சர் ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரண்பேடி கருத்துச் சொல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் கிரண்பேடியின் கருத்துக்குப் புதுச்சேரி மக்களிடையே ஆதரவு பெருகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, பிரிட்டனிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவருடன் பயணித்தவர் குறித்த விவரங்களைச் சேகரித்தபோது, புதுச்சேரியைச் சேர்ந்த 30 வயது பெண்மணியும் அந்த விமானத்தில், பாதிக்கப்பட்டவருக்கு பக்கத்து இருக்கையிலேயே அமர்ந்து பயணித்து வந்தது தெரியவந்தது.

எனவே அவர் தற்போது புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்.இதனிடையே கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வருக்கு கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.

More News >>