இயக்கம் தொடங்கினார் சத்யராஜ் மகள்: தேர்தலில் போட்டியா?

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். தேர்தலில் போட்டி எல்லாம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சத்யராஜ் மகள் திவ்யா விரைவில் ஒரு அரசியல் கட்சியில் சேர இருக்கிறார். தேர்தலில் போட்டியிடுவார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் ஊகங்கள் பரவ ஆரம்பித்த நிலையில் 'மகிழ்மதி' என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார் திவ்யா.இந்தியாவில் ஓர் ஆண்டில் பத்து மில்லியன் திருமணங்கள் நடைபெறுகின்றன. அந்தத் திருமண விழாக்களில் பரிமாறப்படும் உணவில் முப்பது சதவீதம் வீணாகிறது. . உணவும் ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்க வேண்டுமாயின் அவர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடிய உணவு கிடைக்க வேண்டும். அதைக் கிடைக்கச் செய்வதே இந்த இயக்கத்தின் லட்சியம் என்கிறார் அவர்.

மகிழ்மதி இயக்கம் எனது கனவு. என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது, மகிழ்மதி என்ற பெயர் தோன்றியது. என் அம்மா மகேஸ்வரி பெயரின் முதல் பாதியை( மகி)என் இயக்கத்தின் பெயரில் இணைக்க வேண்டும் என்பது என் ஆசை. அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

மகிழ்மதி இயக்கம் அரசியல் கட்சியோ, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் பகுதிகளில் சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர் உன்னத இயக்கம். கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடிய குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்கினோம். கொரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இந்த இயக்கத்தின் மூலம் செய்ய இருக்கிறோம் என்கிறார் சத்யராஜின் மகள்.

More News >>