இளம்பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்று எரித்த முன்னாள் காதலன்

தன்னை மறந்து வேறு ஒருவரைக் காதலித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் தீ வைத்து எரித்தார். இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்ற இடத்தில் நடந்துள்ளது.ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் கூட்டி ராஜேஷ் (26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சினேகலதா (19) என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சினேக லதாவுக்கு ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. இதன் பின்னர் அவர் காதலன் ராஜேஷை ஒதுக்கத் தொடங்கினார். மேலும் அவர் வேறு ஒரு வாலிபரைக் காதலிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ராஜேஷுக்கு தெரியவந்தது. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சினேக லதாவை போனில் அழைத்த ராஜேஷ், தன்னுடன் அங்குள்ள ஒரு பூங்காவுக்கு வருமாறு கூறியுள்ளார். அதற்கு சினேகாவும் சம்மதித்துள்ளார். இதையடுத்து சினேகலதாவை ராஜேஷ் தன்னுடைய பைக்கில் அழைத்துச் சென்றார்.வழியில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சினேகலதாவை ராஜேஷ் கழுத்தை நெரித்துக் கொன்றார். பின்னர் அவர் தயாராகக் கொண்டு வந்த பெட்ரோலை அவரது உடலில் ஊற்றி தீ வைத்தார்.

இதன் பின்னர் ராஜேஷ் அங்கிருந்து சென்று விட்டார். சினேகலதாவை நீண்ட நேரம் காணாததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் சினேகலதா கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சினேகலதாவை கொன்றது அவரது முன்னாள் காதலன் ராஜேஷ் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

More News >>