31 ஆம் தேதி மீண்டும் கேரள சட்டசபையை கூட்ட முடிவு.. கவர்னரை சந்தித்து அனுமதி கோரிய அமைச்சர்கள்

வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 31ஆம் தேதி சட்டசபையை கூட்ட மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி அளிக்காததால் இன்று இரண்டு அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுதற்காகக் கடந்த 23ம் தேதி சிறப்புச் சட்டசபையைக் கூட்ட கேரள அரசு தீர்மானித்திருந்தது.

இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அனுமதிக்காகக் கேரள கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பு சட்டசபையைக் கூட்ட கவர்னர் அனுமதி மறுத்து விட்டார். ஏற்கனவே ஜனவரி 8ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் அதற்கு முன்னதாக சட்டசபையைக் கூட்ட என்ன அவசர தேவை இருக்கிறது என்று கூறி அவர் கேரள அரசுக்குக் கடிதம் அனுப்பினார். ஆனால் அமைச்சரவை கூட்டத்தின் முடிவுக்கு அனுமதி மறுக்க கவர்னருக்கு அனுமதி இல்லை என்று கூறி முதல்வர் பினராயி விஜயன் கவர்னருக்கு பதில் கடிதம் அனுப்பினார்.

இதையடுத்து கேரள அரசு மற்றும் கவர்னருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் கவர்னருடன் கூடுதல் மோதல் வேண்டாம் என்று கருதி ஜனவரி 8ம் தேதி தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் பினராயி விஜயன் தனது முடிவை திடீரென மாற்றி டிசம்பர் 31ம் தேதி மீண்டும் சிறப்புச் சட்டசபை கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்தார். இது தொடர்பாக நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டம் கூடி முடிவு எடுக்கப்பட்டது.பின் கவர்னரின் அனுமதிக்காக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் கவர்னர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து கூடுதல் சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்காக இன்று கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் மற்றும் விவசாயத் துறை அமைச்சர் சுனில் குமார் ஆகியோர் கவர்னர் மாளிகைக்குச் சென்று கவர்னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 35 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சட்டசபை கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இருவரும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உடனடியாக கவர்னர் எந்த முடிவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இம்முறையும் சிறப்புச் சட்டசபை கூட்டத்தை நடத்த கவர்னர் அனுமதி அளிக்காவிட்டால் அது கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>