கர்நாடக துணை சபாநாயகர் சாவு ஒரு அரசியல் படுகொலை.. குமாரசாமி குற்றச்சாட்டு..

கர்நாடக மேலவைத் துணைச் சபாநாயகர் தர்மேகவுடா தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் அரசியல் படுகொலை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணைச் சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். அவர் நேற்று சகாராபட்டினாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். அங்கிருந்து இரவு 10 மணியளவில் புறப்பட்டு வெளியே சென்றிருக்கிறார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது வேலைக்காரர்களும், உறவினர்களும் தேடிச் சென்றனர்.

இந்நிலையில், இன்று(டிச.29) அதிகாலையில் குணசாகரா பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே தர்மேகவுடா சடலமாகக் கிடந்தார். அதன் அருகே அவர் எழுதி வைத்த ஒரு கடிதம் இருந்தது. போலீசார் அந்த கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் சமீபத்தில் சட்டமேலவையில் நடந்த சம்பவம் குறித்து தர்மேகவுடா சில வரிகளைக் குறிப்பிட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி கூறியதாவது:தர்மேகவுடா மரணம் ஒரு அரசியல் படுகொலை. அவரது இந்த மரணத்திற்கு யார் காரணம் என்ற உண்மை வெகு விரைவில் வெளியே வரும். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

More News >>