உலகிலேயே கடினமான வேலை எது தெரியுமா? நடிகை சொல்கிறார்..

காதல் சொல்ல வந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேக்னா ராஜ். உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களிலும் நடித்தார். தவிர மலையாள, கன்னட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து மணந்தார். இவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுக் கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் யாரும் எதிர்பாராதவிதமாக சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பில் மரணம் அடைந்தார். அந்த நேரத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.

இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன் மேக்னாவை நிலை குலைய வைத்தது. கணவர் இல்லாத வாழ்க்கை அவரது வாழ்வை இருண்டதாக மாற்றியது. ஆனாலும் பிறக்கப் போகும் குழந்தைக்காக மனதை தேற்றிக்கொண்டிருந்தார். சில மாதங்களில் மேக்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கணவரின் மறைவு மேக்னாவை வருத்தத்தில் ஆழ்த்தியபோதும் மனதைத் தேற்றிக்கொண்டு குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

குழந்தை வளர்ப்பு பற்றிக் கூறிய மேக்னாராஜ், உலகிலேயே கடினமான வேலை தாய்மை தான் என தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது: தாய்மை என்பது பூமியில் மிகவும் கடினமான வேலை. ஒரு தாயின் அன்பின் மதிப்பை உணர வேண்டுமென்றால் அவள் தாயாக மாறி அந்த அனுபவம் பெற்றால்தான் உணரமுடியும். ஒரு தாயின் அன்பின் மதிப்பு மற்றும் தியாகங்களை நீங்களே அனுபவிக்கும் வரை அதுபற்றி புரிந்து கொள்ள முடியாது என்று மக்கள் சரியாகவே கூறியுள்ளனர். அந்த தியாகம், அன்புக்காக என் அம்மாவுக்கு நான் சல்யூட் செய்கிறேன்.எனது தாயார் பிரமிளா ஜோஷாய் இன்னும் எனக்கு மிகப்பெரிய பலமாகத் தொடர்கிறார். சிரஞ்சீவி சார்ஜாவின் அகால மரணத்திற்குப் பிறகு தனது தாயார் தனது பலவீனமான தருணங்களில் என்னைப் பார்த்தார், என்னைப் பார்த்து அவர் ஒரு பாறை போல் நின்றார். அவர்தான் தொடர்ந்து எனக்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறார். என் கர்ப்ப காலத்தில் நான் மிகவும் மனதளவில் பலவீனமாக இருந்தேன். எனது ஒவ்வொரு அடியிலும், எனக்கு பலம் கொடுத்து அவர் தேற்றினார் என்றார்.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி, மேக்னா, அவரது மகனும் மற்றும் பெற்றோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்கள். தற்போது அவர்கள் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி மேக்னா ஒரு அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம், என் தந்தை, அம்மா, நானும் என் சிறிய மகனும் கோவிட் 19 பாசிடிவ் ஆக சோதிக்கப்பட்டோம். கடந்த சில வாரங்களாக எங்களுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் எங்கள் முடிவுகள் குறித்து அறிவித்துள்ளோம். நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம், தற்போது சிகிச்சையில் இருக்கிறோம். ஜூனியர் சிரஞ்சீவி நன்றாக இருக்கிறான். ஒரு குடும்பமாக நாங்கள் இந்த போரில் போராடி, அதிலிருந்து மீண்டு வருவோம் என்றார் மேக்னா ராஜ்.

More News >>