புத்தாண்டு பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடை

இரண்டாம் கட்ட கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டுவரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை நகரங்களில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தமிழக அரசின் உத்தரவுப்படி புத்தாண்டு கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் பொது இடங்களில் இளைஞர்கள் உள்பட யாரும் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை கோவை, சேலம் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரை நகரங்களிலும் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்றால் இரவு 10 மணிக்குத் தொடங்கி அதிகாலை வரை நீடிக்கும், இளைஞர்கள் பொது இடங்களில் பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்வது வழக்கம். ஆனால் கொரானா பரவல் பாதிப்பின் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.சென்னை மாநகர முக்கிய சாலைகளில் உள்ள 75 மேம்பாலங்கள் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால் மெரினா, பெசண்ட்நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்குப் பொதுமக்கள் வரவேண்டாம் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.இதேபோல் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கலன்று கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

More News >>